Showing posts with label freedom for woman. Show all posts
Showing posts with label freedom for woman. Show all posts

Sunday 10 February 2013

பெண்கள்


            அன்புருவாய் 
       அமைதிப் பூங்காவாய்
       பண்புப் பெட்டகமாய்
       தியாகச் சுடராய்
       அழகு சிலையாய்
       போகப் பொருளாய்
       வரையறுக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களில்
       ஆதி அடையாளத்தை மறந்தனர் நம் பெண்கள்.   
     
     முள்ளில்தான் வாழ்க்கை என்றாலும் 
     சிரித்துக்கொண்டிருக்கும் ரோஜா பெண்
              
அத்தகைய பெண்களின் நிலை குறித்து என் கருத்துகளை
பதிவு செய்வதில் மகிழ்கிறேன்.

பெண்-அன்று:
  
  • தமிழ்ச் சமூகம் தாய் வழிச் சமூகமாக இருந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது.பெண் குழந்தைகளுக்கு கருவறை கல்லறையானது.கல்வி மறுக்கப்பட்டது.விதவைகள் உணர்வு ரீதியாக தாக்கப்பட்டனர்.       
இந்தச் சூழலில்,
           
       பெண் மென்மையின் அடையாளம் 
             மட்டுமல்ல புரட்சியின் சின்னம்  
      என்னும் குரல் ஒலிக்கத் துவங்கியது. 

பெண்-இன்று: 


       பெண் விழித்துக்கொண்ட காலம் இது.  

   இன்றைய பெண்ணினம்,
           விண்ணை எட்டிப்பிடித்து
              விண்மீன்களோடு விளையாடும்
                   வீரப் பெண்ணினம்,
  •  பெண்கள் கலியுகச் சிற்பிகளாய்,தங்களுக்குள் இருக்கும் பயம்,தயக்கம்,சோம்பல் இவற்றை செதுக்கி எறிந்துவிட்டு, தங்களுக்குள் இருக்கும் அற்புதமான  நிர்வாகியை,  எழுத்தாளரை, கவிஞரை,கணக்காளரை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் காலம் இது.
  • ஹார்வோர் பிசினஸ் ரிவ்யூ இதழ் தனது கட்டுரையில் பெண் நிருவாகிகளை அதிகம் கொண்டிருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் அதிக லாபத்துடன் இயங்குவதாக கூறியுள்ளது.
*பெப்ஸிகோ கம்பெனியின் தலைவர் இந்திரா நூயி,
* ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியை வழிநடத்திச் செல்லும் சந்தா கோச்சர்,
* குழந்தைகளை பெற்ற பிறகும் ஒலிம்பிக்கில் நான்கு முறை தங்கப் பதக்கம் வென்ற ரெனகா சிவிங்ஸ்டன்,
*எட்டு முறை ஆஸ்கார் விருது பெற்ற எடித் ஹெட்,
*இங்கிலாந்தின் உயரமான ஹாரிசான் மலை மீது ஏறி சாதனை புரிந்த பார்வையற்ற பெண் காஞ்சன் காபா,
 *பத்து பல்கலைகழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற இலாபட்
  • இவர்கள் தொடங்கி நம் வீடுகளில் இன்று வேலைக்குச் செல்லும் நம் தாய்,சகோதரிகள் வரை குடும்பம்-அலுவலகம் என்று இரண்டையும் அருமையாக வழி நடத்திச் செல்லும் சாதனைப் பெண்கள் பலரை இந்த உலகம் பெற்று விட்டது.
 ‘பூவுக்குள் ஒரு பூகம்பம் என்னும் கூற்று உண்மையாகியுள்ளது 

பெண்கள் சந்திக்கும் சவால்கள்:
  •  இந்த கால கட்டத்திலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்வது அதிர்ச்சியான ஒன்றே. 
  •  கடந்த 2011-ம் ஆண்டை விட 2012-ம் ஆண்டு மத்தியப் பிரதேசம்,பீகார்,உத்தரகண்ட்,ஒடிஸா மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் பெருமளவில் குறைந்துள்ளதை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.
பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்:


மாநிலம்
2011
(1000 ஆண்களுக்கு)
2012
(1000 ஆண்களுக்கு)
மத்தியப் பிரதேசம்
912
904
உத்தரகண்ட்
886
866
பீகார்
933
919
ஒடிஸா
934
905


எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் கருவில் கொல்லும் கலாச்சாரம் ஒழிந்தால்தான் பெண் குழந்தைகளுக்கு விமோச்சனம் கிடைக்கும்.
  •  தற்போது நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அமெரிக்காவில் பணிபுரியும் பெண்களில் 38% பேர் தங்களுக்கு ஆண்களுக்கு நிகரான திறமையும் அனுபவமும் இருக்கும் போது குறைவாகவே சம்பளம் தருவதாக தெரிவித்துள்ளனர்.
இதிலிருந்து பெண்களின் பிரச்சனை உலகளாவிய அளவில் இருப்பது விளங்குகிறது.
  •  அரசியலில் பெண்கள் ஈடுபடுவதில் 105-வது இடம் இந்தியாவிற்கு. 543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளு மன்றத்தில் 60-பேர் பெண்கள்.அதாவது இது 11% தான்.
     மீட்க வரும் ராமனுக்காய் காத்திருக்கும் சீதைகள்         
           அசோக வனத்தில் இல்லை வரதட்சணை சிறைக்குள்
       என்பதற்கேற்ப வரதட்சணை கொடுமைகள் இந்திய சமூகத்திற்கே அவமானம் சேர்க்கின்றன.
  • "கவிதையானாலும் சட்டமானாலும் மனமாற்றம்           வந்தால்தான் அது முழுமை பெரும். "

பெண்கள் முன்னேற்றத்தில் ஆண்களின் பங்கு:
           
 ஒரு பெண்,
            சிலையாக இருந்தால் இரசிக்கிறீர்கள்
            கதையாக இருந்தால் படிக்கிறீர்கள்
            காவியமாக இருந்தால் சிந்திக்கிறீர்கள்
            தெய்வமாக இருந்தால் பூஜிக்கிறீர்கள்
            கருவாக இருந்தால் மட்டும் ஏன்  அழிக்கிறீர்கள் ??? 

ஆண்களே,
  •  வார்த்தைகளால் வடிக்கப்படாத மெல்லிய உணர்வுகள் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் உள்ளோடிக் கொண்டிருப்பதை புரிந்து கொள்ளுங்கள்.
  •  ஒரு பெண் தன் சம்பத்தப்பட்ட முடிவுகளை தானே எடுக்கும் உரிமைக்குத்தான் ஆசைப்படுகிறாள்.அந்த நாளுக்காக ஒவ்வொரு நாளும் ஏங்குகிறாள்.இதுதான் ஒவ்வொரு பெண்ணின் அடிமனதிலும் இருக்கும் ஆசை.
  •  உங்கள் தாயை, தோழிகளை, சகோதரியை, மனைவியை, மகளை, உடன் பணி புரியும் பெண்களை மரியாதையுடனும் பெருமையுடனும் நோக்குங்கள்.அவர்களின் முயற்சிகளில் ஆதரவு கொடுங்கள்.அவர்களின் சேவைகளை நன்றியுடன் நோக்குங்கள்.
  • வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.இதுவே போதுமானது பெண்கள் உரிமை பெற.
                                                   
          “கண்கள் இரண்டினில் ஒன்றை-குத்திக்
          காட்சி கெடுத்திடலாமோ?
          மாதர் அறிவை வளர்த்தால் வையம்
          மாண்புடன் வாழுமடா
                                    -----பாரதி


பெண்ணே! வா வெளியே:
  • இன்றைய பெண்களின் நிலையை பின்வரும் கவிதை அழகாக விளக்குகிறது.
         “பொன்னும் பெண்தான் மண்ணும் பெண்தான்
          நதியும் பெண்தான் நாடும் பெண்தான்
          கவிதையும் பெண்தான் காதலும் பெண்தான்
          அன்பும் பெண்தான் அறிவும் பெண்தான்
          அனைத்தும் பெண்தான்  இருந்தும் தான் 
          யார் என்பதை அறியாதவள்தான் பெண்
  • ஒரு பெண்ணுக்கு பெரிய எதிரியே அவளது பயம்தான்.நத்தை என்றால் ஓட்டுக்குள் இருப்பதுதான் பாதுகாப்புஎன்று அவளே சுருங்கிக்கொள்ளும் மனப்பாங்கு இங்கு பெரும்பாலான பெண்களின் டி.என்.ஏ.விலும் அவர்களுக்கே தெரியாமல் செலுத்தப்பட்டிருப்பது இன்னும் கொடுமை. 
 
  • கூச்சம்என்ற கூட்டை உடைத்து வெளியே வர ஒரு பெண் தன்னை எதிர்த்தே ஒரு கடும் போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது.
           பெண் விடுதலை பேச்செதற்கு
            உன் விடுதலை உன் கையில்
            கோழியல்ல பருந்து நீ
            சிறைக்கதவுகள் சிதறி சில காலம் ஆயிற்று
            சிறகுகள் விரித்து பறந்து வா
            சம்பிரதாயங்களுடன் சரிந்து போகாமல்
            சரித்திரம் படைக்க வா பெண்ணே


பெண்களே,
  •  சுதந்திரம் என்பது ஆண்களைப் போல நடந்து கொள்வதற்காக அல்ல. பெண் அடிமையாக இல்லாமல் பெண்ணாக இருப்பதற்குத்தான்.
  •  ஆண்களைப் போல உடையணிவதும்,ஆண்களைக் கண்டாலே எதிர்ப்பதும் அல்ல பெண்ணியம்.

  • ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் சம உரிமையோடும் சுய மரியாதையோடும் வாழ்வதே இனிய வாழ்வு.
             கூண்டுக்கிளியாய் வைக்க முற்பட்டதில்
              தோல்வி பெண்ணுக்கல்ல
              உயிரற்ற கம்பிகளாய் சூழ்ந்து நின்ற
              மூட சம்பிரதாய சடங்குகளுக்கே



             பெண்ணே!
            ‘உன் கண்களின் ஒளியில்தான்
             சூரியக் கதிர்களுக்கு
             கனல் கிடைக்க வேண்டும்.
             உன் கைகளின் எழுத்துகளில்தான்
             உலகமே உன்னதப்பட வேண்டும்


             பெண் சக்தி   பெரும் சக்தி!
             மகளிர் சக்தி மகத்தான சக்தி!
             பெண் விடுதலையே மண் விடுதலை!
             வாழ்க பெண்  வெல்க பெண்ணினம்!

Popular Posts